by Staff Writer 21-11-2018 | 6:23 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபை உறுப்பினராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் செயற்படுவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வாக்காளராகப் பதிவு செய்யப்படாத ஒருவர் என தெரிவித்து அவர் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவதைத் தடை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உறுப்பினராக செயற்படுவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இந்த தடையுத்தரவு தொடர்பில் பிரதிவாதியான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அடுத்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்கு வழக்கினை நீதியரசர் ஒத்திவைத்தார்.
வழக்கு தாக்குநர் சார்பான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் ஆஜராகியிருக்கவில்லை.