ஊதிய முரண்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை

ஊதிய முரண்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 21-11-2018 | 7:10 AM
Colombo (News 1st) அரச சேவையில் நிலவும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்து பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுக்கே தெரிவித்துள்ளார். குறித்த ஆய்வறிக்கை தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரச சேவையில் ஊதியப் பிரச்சினைகள் தொடர்பில் தௌிவுப்படுத்துமாறு தொழிற்சங்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, 800க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், விடயங்களை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே சேவை மற்றும் தபால் சேவை உள்ளிட்ட அரச சேவைகளில் நிலவும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில், குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்துள்ளதாக அதன் தலைவர் எஸ். ரனுக்கே குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க, ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான சிபாரிசுகள் பலவற்றை அறிக்கையினூடாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். அரச சேவையின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இதுவரையில் அமுலிலுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரச சேவையில் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் அல்லது முரண்பாடுகள் காணப்படுமாயின் அவற்றைத் தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எஸ். ரனுக்கே உள்ளிட்ட 15 பேர் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.