2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள சமரவீர

by Bella Dalima 20-11-2018 | 9:18 PM
Colombo (News 1st) தற்போதைய அரசியல் நிலைமையில், நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியை செலவிடுவது தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது. டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால கணக்கு அறிக்கையையோ அல்லது வரவு செலவுத் திட்டத்தையோ சமர்ப்பிக்காவிட்டால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். வரி கணக்கில் இருந்து நிதியைப் பெறுவதாயின், சட்டப்பூர்வமான நிதியமைச்சர் ஒப்பமிட வேண்டும். பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் அரசாங்கமொன்று இல்லாவிட்டால் அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெறும் அனைவருக்கும் நிதியை செலுத்த முடியாமற்போகும் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.
இடைக்கால கணக்கு அறிக்கையல்ல 2019ஆம் ஆண்டிற்காக நாம் தயாரித்துள்ள, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நாம் தயார். தற்போதுள்ளவர்கள் சமர்ப்பித்தால் அது தோல்வியடையும். ஏனென்றால், அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை. கதிரையில் அமர்கின்றனர் என்பதற்காக பெரும்பான்மை கிடைக்காது. எதிர்க்கட்சியில் நாம் அமர்ந்தாலும் எமக்கே பெரும்பான்மையுள்ளது. ஆகவே, இவர்களால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது மிகவும் தெளிவானது.
என அவர் மேலும் குறிப்பிட்டார்.