போட்டித்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் 

ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கெமரோன் பேன்க்ரொஃப்ட் மீதான தடை தொடரும்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்

by Bella Dalima 20-11-2018 | 6:59 PM
Colombo (News 1st) பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடையை அனுபவித்து வரும் ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களின் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரான கெமரோன் பேன்க்ரொஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இதற்கு உடந்தையாக இருந்த அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் ஓராண்டு போட்டித் தடையை விதித்தது. பந்தை சேதப்படுத்திய கெமரோன் பேன்க்ரொஃப்டிற்கு 9 மாதங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டது. ஸ்மித், வார்னர், பேன்க்ரொஃப்ட் ஆகியோர் தடையை அனுபவிக்கும் காலத்தில் 100 மணித்தியாலங்களுக்கு அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அவுஸ்திரேலியா சமீபகாலமாக அடைந்துவரும் தோல்வியையும் எதிர்வரும் உலகக்கிண்ணத்தைக் கருத்திற்கொண்டும் ஸ்மித் உள்ளிட்ட மூவரும் தடையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்திருந்ததே அதற்கான காரணமாகும். என்றாலும், அந்த தடை உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அது அமுலில் இருக்கும் என்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த மூவருக்கும் அவுஸ்திரேலிய பிராந்தியப் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை நீடிக்கின்றது.