குற்றவாளிகளின் விடுதலை குறித்து தி.மு.க. கேள்வி

ராஜீவ் கொலை: குற்றவாளிகளின் விடுதலை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி

by Staff Writer 20-11-2018 | 1:31 PM
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பில் ஆளும் அ.தி.மு.க. ஏன் ஆளுநரை வலியுறுத்தவில்லை என திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வியெழுப்பியுள்ளது. ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆயுள்தண்டனை கைதிகளான தமது கட்சியின் 3 ஆதரவாளர்களை விடுதலை செய்தவர்கள், ஏன் இது குறித்து வலியுறுத்தவில்லை என கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வினவியுள்ளார். தருமபுரி பஸ் எரிப்பு வழக்கின் ஆயுள்தண்டனை குற்றவாளிகளான அ.தி.மு.கவினர் மூவரை, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழக அரசு வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளது. இது குறித்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் அறிக்கை வௌியிட்டுள்ளார். 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரிடம் உரியமுறையில் வலியுறுத்தி, 7 பேரையும் விடுதலை செய்யாமல் தாமதிப்பது இவர்களின் விடுதலையில் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதையே காட்டுவதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சுமார் 27 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தித் தேவையானவற்றைக் கேட்டு சாதித்துக் கொள்ளும் அ.தி.மு.க. அரசு, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.