மேல் மாகாண சபையில் ஆபாசக் காட்சிகளைப் பார்வையிட்ட ஐமசுகூ உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

by Bella Dalima 20-11-2018 | 6:39 PM
Colombo (News 1st) மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று (19) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சபையில் இருந்த கணினியில் சில உறுப்பினர்கள் ஆபாசக் காட்சிகளைப் பார்வையிட்டமை தொடர்பில் முதலமைச்சர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். ஆறரை பில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பணம் செலவிடப்பட்டு, பத்தரமுல்லை - டென்சில் - கொப்பாகடுவ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் புதிய கட்டடத்தில் முதலாவது சபைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நவீன கட்டமைப்புகளுடன் கூடிய இந்த கட்டடத்திலுள்ள மண்டபத்தில் இணையத்தள வசதிகளுடன் நவீன கணினிகளும் உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. 150 மில்லியன் ரூபா செலவில் கதிரைகளை இந்த கட்டடத்திற்காகக் கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டது. நேற்றைய அமர்வின் போது அடுத்த வருடத்திற்கான மாகாண சபைக்குரிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, குணசிறி ஜயனாத், சுமித் சொய்சா மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகிய மூன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களே இவ்வாறு ஆபாசக் காணொளிகளைப் பார்வையிட்டுள்ளனர். இந்த செயற்பாட்டிற்கு மக்கள் பலத்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.