ட்ரம்பின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை

குடியேறிகளைத் தடுக்கும் ட்ரம்பின் உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

by Bella Dalima 20-11-2018 | 4:46 PM
அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகளை எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். அவ்வகையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக 2,382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 83 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் அடைக்கலம் தேடி வந்து கொண்டிருப்பதாக அறிந்த அதிபர் ட்ரம்ப், அவர்களை எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்துமாறு குடியுரிமைத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 8 ஆம் திகதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க பொது சிவில் உரிமை சங்கம் சார்பில் அந்நாட்டின் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. அமெரிக்காவிற்குள் அடைக்கலம் தேடி எல்லைப்பகுதியில் அனுமதி கோரினாலும் அல்லது நாட்டினுள் நுழைந்து விட்டாலும் அதற்கான உரிமை அரசியலமைப்பு சட்டம் மூலம் குடியேறிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது சிவில் உரிமை சங்கம் தெரிவித்தது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளதாக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட விவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக அதிபர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில், அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகளை எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவிற்கு சான் பிரான்சிஸ்கோ மாவட்ட தேசிய நீதிமன்ற நீதிபதி ஜான் டிகார் இடைக்காலத் தடை விதித்துள்ளார்.