Colombo (News 1st) பாராளுமன்றத்தில் தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் குர்ஆன் என்மீது பட்டது. நேரடியாக என் வயிற்றில் அடிபட்டது. எனினும், நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. அதற்கு பின்னர் என் கண்களில் மிளகாய்த்தூள் பட்டது நினைவுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் சட்டதிட்டங்கள் நமக்கு போதாது. இதன் காரணமாகவே எமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, தகுந்த சாட்சியங்களுடன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்ய தீர்மானித்தேன். இதன்பின்னர் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை நீதிமன்றம் முன்னெடுக்கும். இவர்களின் முகங்களை பார்க்காது, தகுதி, கொள்கை என்பவற்றை நன்கு அவதானித்து எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி--
களரியில் இருந்த குழுவொன்று கூச்சலிட்டதாக உங்கள் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளதே?
அது தொடர்பில் எமக்குத் தெரியாது. பொலிஸார் அதனைப் பார்த்துக் கொள்ளட்டும். எமது கட்சியினர் குழம்பியிருந்தால் அசிட் தாக்குதல் நடத்தவும் ஏற்பாடுகள் இருந்ததாக அறியக் கிடைத்துள்ளது. இதைவிட மிக பயங்கரமான விடயமாக சர்வதேச நாடுகளின் தடைகள் வரத் தொடங்கியுள்ளன. உதவிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த வரவுசெலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை செய்துகொள்ள வேண்டியுள்ளது. பாராளுமன்ற அனுமதி இல்லாது போனால் என்ன நடக்கும்? அடுத்த வருடம் 300 - 400 ரூபா வரை டொலரின் பெறுமதி அதிகரிக்கக்கூடும். இந்த நிலையை ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டிற்காக சிரேஷ்ட உறுப்பினர் என்ற ரீதியில் நான் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என காமினி ஜயவிக்ரம பதிலளித்துள்ளார்.