உருகுவேயில் தஞ்சம் கோரும் எலன் காஸியா

உருகுவேயில் தஞ்சம் கோரும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி எலன் காஸியா

by Chandrasekaram Chandravadani 19-11-2018 | 2:09 PM
தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி எலன் காஸியா (Alan García), உருகுவே நாட்டுத் தூதரகத்திடம் தஞ்சம் கோரியுள்ளார். பெரு தலைநகர் லீமா நகரில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பிரேஸில் நிறுவனமொன்றிடம் வழங்கியதன் மூலம் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக எலன் காஸியா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எலன் காஸியா, தான் அரசியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு அவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவு விடுக்கப்பட்டு சில மணி நேரத்தின் பின்னர், உருகுவே தூதரகத்தில் எலன் காஸியா தஞ்சம் கோரியுள்ளதை, பெருவின் வௌிவிவகார அமைச்சு உறுதிசெய்துள்ளது. அதேநேரம், இந்தக் கோரிக்கை உருகுவே அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் வௌிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எலன் காஸியாவிற்கு தஞ்சமளிப்பது தொடர்பில் உருகுவே இன்னும் உறுதிப்படுத்தவில்லை.