கஜா புயலால் தமிழகத்தில் 23 பேர் பலி

ஆக்ரோ‌ஷமாகத் தாக்கிய கஜா புயலால் தமிழகத்தில் 23 பேர் பலி

by Bella Dalima 16-11-2018 | 4:43 PM
Colombo (News 1st) தமிழகத்தில் பல மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் பாதிப்பினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயல் வியாழக்கிழமை (15) மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின் முன்பகுதி தமிழக கடலோரத்தைத் தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்கத் தொடங்கியது. வேதாரண்யத்திற்கும் நாகைக்கும் இடையே புயல் கரையைக் கடந்தது. கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்களும் சாய்ந்து வீழ்ந்துள்ளன. குறிப்பாக நாகை மாவட்டம் கஜா புயலால் கடும் நாசத்தை சந்தித்துள்ளது. அங்கு மின்சாரம் சீராகி, மக்களின் இயல்பு நிலை திரும்ப குறைந்தது 2 நாட்களாகும் என கூறப்பட்டுள்ளது. கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.