கஜா புயல் -வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

கஜா புயல் -வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

by Chandrasekaram Chandravadani 16-11-2018 | 8:48 AM
சீரற்ற வானிலை காரணமாக வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார். கஜா புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் நேற்றரவு முதல் மழை பெய்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் - அனலை தீவில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், சில மணித்தியாலங்களுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அச்சுவேலி பகுதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ் புறநகர் பகுதிகளிலும், நாவாந்துறை பகுதிகளில் சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார், நீர்வேலி பகுதியில் வாழைத்தோட்டத்திற்கு கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி, மற்றும் தர்மகேணி பகுதிகளில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்துள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பும் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று இரவு முதல் தொடர்ந்தும் மழை பெய்து வருதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மன்னார் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கத்தினால் திருகோணமலை கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஏனைய செய்திகள்