கஜா சூறாவளி: வட கடற்பிராந்தியங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம்; மக்கள் அவதானமாக செயற்படவும்

by Bella Dalima 15-11-2018 | 5:07 PM
Colombo (News 1st) காங்கேசன்துறையிலிருந்து 325 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள கஜா சூறாவளி காரணமாக மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான கரையோரப் பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. கடல்நீர் உட்புகும் அபாயம் நிலவுவதன் காரணமாக, கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் நிலப்பகுதி நோக்கி சற்று உட்புறமாக நகர்ந்து பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 150 மில்லிமீட்டர் அளவில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.