காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைக்கு

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி மீதான வழக்கு நாளை முதல் விசாரணைக்கு

by Staff Writer 14-11-2018 | 1:54 PM
Colombo (News 1st) லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு நாளை (15) முதல் மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பத் ஜானகி ஆகிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த வழக்கின் நான்காவது சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவை நாளை காலை 9 மணிக்கு மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருக்குப் பதிலாக ஆஜரான பிரதி சொலிஸ்டர் நாயகம் சுசித் முதலிகே விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்து நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவினை விடுத்துள்ளார்.