அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை - சட்டமா அதிபர்

by Staff Writer 13-11-2018 | 11:58 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (13), இரண்டாவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று முற்பகல் 10.05 மணியளவில் இந்த மனுக்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை அறிவித்திருந்தார். பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு எடுத்த நடவடிக்கையால், அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை என இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய சட்டமா அதிபர் இன்று மன்றில் ஆஜராகி விளக்கமளித்தாலும், அவர் நாட்டின் சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாகவே தமது நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி சார்பில் தாம் இன்று மன்றில் ஆஜராகி விளக்கமளித்தாலும், நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அமைவாகவே இந்த விடயத்தை குறிப்பிட்டதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, 15 நிமிடங்களுக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.