by Staff Writer 12-11-2018 | 4:54 PM
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு இன்று (12) யாழ். மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இந்தத் தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.
கொடிகாமம் பகுதியில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி, 7 வயது சிறுமியொருவர் தமது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த வேளை, 19 வயது இளைஞர் ஒருவரால் கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த வருடம் ஜூன் மாதம் 19 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்கள், நிரூபிக்கப்பட்டதால் நீதிபதியினால் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்கடத்தல் குற்றத்திற்காக 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 12 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடை வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தமது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.