ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் கட்சிகள்

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் கட்சிகள்

by Staff Writer 12-11-2018 | 7:09 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக இன்று (12) உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகியுள்ளது. அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளன. அரசியலமைப்பு, பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகத்தை மீறி, ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாக குறித்த கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன. இதேவேளை, கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம், ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை வௌியிட்டிருந்தன. இந்தநிலையில், இன்று உயர்நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசியலமைப்பிற்கு எதிராக பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் கையொப்பமிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தயாராகவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.