அர்ஜுனவின் மெய்ப்பாதுகாவலர் தொடர் விளக்கமறியலில்

அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் தொடர் விளக்கமறியலில்

by Staff Writer 12-11-2018 | 5:00 PM

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள அமைச்சில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இன்றைய அமர்வில், சந்தேகநபரான பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன், சாட்சியாளர்கள் மூவரில் இருவர் அவரை அடையாளம் காட்டியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மற்றுமொரு சாட்சியாளர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதுடன், அதன்போது சந்தேக நபர் மீண்டும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார். அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்ததுடன், ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.