இலங்கை கிரிக்கெட்டின் திறவுகோல் சுரங்க லக்மாலுக்கு

அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சுரங்கவிடம் திறவுகோல் ஒப்படைப்பு

by Staff Writer 11-11-2018 | 10:00 PM

இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்தவுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. காலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சந்திமால் உபாதைக்குள்ளானார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்தவுள்ளார். எனினும் அவரது வெற்றிடத்துக்கு பதிலாக அறிமுக வீரரான (ch)சரித் அசலங்க இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில்,இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்பட்ட சரித் சேனாநாயக்க அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்கள் காரணமாகவே விலகியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றினூடாக அறிவித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரி வவ்டர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்தது. 14 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சு தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட 14 நாட்களுக்கு அவர் சர்வதேச போட்டிகளில் பந்து வீசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.