ஏமனில் கடும் போர்: 58 பேர் பலி

ஏமனில் கடும் போர்: கிளர்ச்சியாளர்களும் படைவீரர்களுமாக 58 பேர் பலி

by Bella Dalima 09-11-2018 | 6:32 PM
ஏமனில் நிகழும் கடும் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவுப் படையினர் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களத்தில் குதித்துள்ளன. அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அந்நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவுப் படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு வருகின்றன. ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆதரவுப் படையினர் 11 பேர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும் கண்ணி வெடிகளாலும் தான் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிபர் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.