விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்: பழ.கருப்பையா

விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்: பழ.கருப்பையா

by Bella Dalima 08-11-2018 | 4:26 PM
சர்கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பழ.கருப்பையா, விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று கூறியுள்ளார்.
ஒரு படம் தணிக்கை குழு அனுமதியுடன் வெளிவந்த பிறகு ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால் தணிக்கை குழுவிற்கு வேலையே இல்லை. இத்தனை பேரிடம் வாக்கெடுப்பு நடத்தி ஒரு படமெல்லாம் வெளியிட முடியாது. அதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு இதை அனுமதித்து இருக்கிறது. நான் பல சமயங்களில் பேசிய வசனங்கள் அதில் மியூட் செய்யப்பட்டுள்ளது. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும். அதில் ஒன்று கலைஞரைப் பற்றிய வசனம். கலைஞரை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வசனம் ஒன்றும் அதிலே இருக்கிறது. 15 வயதில் டவுசர் போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்தேன் என்று சொன்னால் அது கலைஞரை குறித்துவிடும் என்பதற்காக அதை நீக்கி இருக்கிறார்கள்.
என்று பழ.கருப்பையா கூறியுள்ளார். இந்த படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்ததுதான் என குறிப்பிட்டுள்ள அவர், நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்தப் படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் ஒரு உறுதி இருக்கிறது. தனக்கு அளப்பரிய அன்பு செலுத்துகின்ற இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா என்று எனக்கு தெரியாது. அவருக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார். ரொம்ப அபூர்வமான உடல் அமைப்பு. அதனால் ஒரு கிரேஸ் இருப்பவர் அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார்.
என்று பழ.கருப்பையா உறுதியாகக் கூறியுள்ளார்.