கலிஃபோர்னியாவில் மதுக்கடையில் துப்பாக்கிச்சூடு

கலிஃபோர்னியாவில் உள்ள மதுக்கடையில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 08-11-2018 | 4:12 PM
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் (Thousand Oaks) பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை நள்ளிரவில் இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வட மேற்குப் பகுதியில் 40 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Borderline Bar and Grill எனும் மதுக்கடையிலே​யே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் குறித்த மதுக்கடையில் இருந்து சிலர் தூக்கிச்செல்லப்படும் காட்சியை உள்ளூர் ஊடகங்கள் சில வௌியிட்டுள்ளன. நாற்காலிகளைப் பயன்படுத்தி ஜன்னல்களை உடைத்து சிலர் மதுக்கடையிலிருந்து தப்பி வௌியேற முயன்றதாகவும் இன்னும் சிலர் அங்குள்ள கழிவறையில் சென்று ஒழிந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர், துப்பாக்கியோடு புகை கக்கும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.