Colombo (News 1st) பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டார்.
மூன்றரை வருடங்கள் வண்ணாத்துப்பூச்சிகளுடன் அரசாங்கத்தை முன்னெடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்தவர்களை வண்ணாத்துப்பூச்சிகள் என மேடையில் குறிப்பிட்டதாகவும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டினார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சரத் பொன்சேக்கா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
மாகந்துரையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து சிறிசேனவின் தரப்பினர் 3000 மில்லியனை கொடுப்பதாகவும் முதலில் 1500 மில்லியனையும், வேலையை முடித்த பின்னர் எஞ்சிய 1500 மில்லியனையும் கொடுப்பதாகப் பேசப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிடுவதற்காக உதவுமாறு சரத் பொன்சேக்கா பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருடன் பேசியதாக குரல் பதிவொன்றை வழங்குமாறு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அவ்வாறான விடயமொன்றை உருவாக்கி, பாதாள உலகத் தலைவர்களுக்கு 3000 மில்லியனை வழங்கி, எம்மை சிறையில் அடைக்க முயல்கின்றனர்.