சவாலை பொறுப்பேற்க அஞ்சப்போவதில்லை - சஜித் பிரேமதாச

சவாலைப் பொறுப்பேற்பதற்கு எச்சந்தர்ப்பத்திலும் அஞ்சப்போவதில்லை - சஜித் பிரேமதாச

by Staff Writer 07-11-2018 | 12:27 PM
Colombo (News 1st) சவாலைப் பொறுப்பேற்க தாம் எச்சந்தர்ப்பத்திலும் அஞ்சப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் இன்று அலரிமாளிகையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஜனபலய மக்கள் பேரணியின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையில், சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
கூட்டணியாக, இணக்கப்பாட்டின் அடிப்படையில் நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அவ்வாறு நல்லாட்சியை நடைமுறைப்படுத்தியபோது, ஜனாதிபதியையும் பிரதமரையும் இணைத்துக்கொண்டு சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அரசாங்கத்தை முன்னெடுப்பதே 24 மணித்தியாலமும் 365 நாட்களும் எனது குறிக்கோளாக இருந்தது. பிரச்சினைகள் ஏற்பட்ட சந்தர்ப்பதிலும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு தனிப்பட்ட இலாபங்களை அடைவது எனது நோக்காக இருக்கவில்லை. நான் செய்த ஒவ்வொரு செயற்பாடுகளின்போதும் ஜனாதிபதியையும் பிரதமரையும் இணைத்துக்கொண்டு நல்லாட்சி செயற்பாடுகளை முன்னெடுத்தேன். ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலேயே நான் எவ்வேளையிலும் செயற்பட்டேன். அரசாங்க செயற்பாடுகளைப் போன்று கட்சியின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதனை முன்னெடுக்கும் பொழுது கொள்கைகளை பின்பற்றுவது முக்கியமானது. நாட்டை நிர்வகிக்கும்பொழுது ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் செயற்படும்போது நான் பதவிகளை எதிர்ப்பார்க்கவில்லை. இரு தலைவர்களையும் இணைத்துக்கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவே எண்ணினேன். சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை. எந்த சவாலை ஏற்றுக்கொண்டாலும் நாம் எவ்வேளையிலும் கொள்கைகளை மதிக்க வேண்டும். நாம் சரியான முறையில் செயற்பட வேண்டும். போட்டிமிகு இந்த அரசியல் நிலைமையை அனைவரும் அவதானித்துக்கொண்டுள்ளனர். நாட்டின் நிர்வாகிகள் செயற்படும் விதத்தினை சிறுவர்களும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நான் மட்டுமல்ல கரு ஜயசூரியவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டார். ஆகவே, நான் எடுத்த தீர்மானம் சரியென்று நினைக்கின்றேன்  
என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.