வசதி வாய்ப்புகளுக்கு விலைபோகக் கூடியவனல்ல

வசதி வாய்ப்புகளுக்கு விலைபோகக் கூடியவனல்ல: ஈ.சரவணபவன் தெரிவிப்பு

by Staff Writer 06-11-2018 | 6:53 PM
Colombo (News 1st)  கொள்கையைக் கைவிட்டு வசதி வாய்ப்புகளுக்கு விலைபோகக் கூடியவர் தான் அல்லவென பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதைய அரசியல் மாற்றத்திற்கிணங்க தன்னுடைய ஆதரவு எந்தத் தரப்பினருக்கு என்பது தொடர்பான வதந்தி முன்னாள் ஜனாதிபதியின் ​ஆதரவுத் தரப்பினரால் உருவாக்கிவிடப்பட்டதென அவர் கூறியுள்ளார். அமைச்சுப் பதவிக்கும் பணத்திற்கும் பத்திரிகையை நடத்துவதற்கான வசதிகளுக்காகவும் தான் மஹிந்த ராஜபக்ஸவுடன் பேரம் பேசியதாக சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய குரல் பதிவில் தெரிவித்துள்ளதாகக் கூறும் ஈ.சரவணபவன், அதற்கு பதிலளிக்கும் வகையில் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். சிவசக்திஆனந்தன் கூறுவதைப் போன்று மஹிந்த ராஜபக்ஸ பக்கம் செல்வது பற்றிச் சிந்திப்பதைக்கூட தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் மூலம் வரும் பணத்தை எதிர்பார்த்து வாழும் நிலை தனக்கு வந்ததில்லையெனவும் ஈ.சரவணபவன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மையில் மஹிந்தவுடன் பேரம் பேசியவர்கள் பின்னர் ரணிலுடனும் பேரம் பேசித் தமது கட்சித் தாவலைத் தள்ளிப் போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், ஜனாதிபதியை வீட்டிற்கு அழைத்து அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்ததற்காக அவர்களோடு இணங்கிப் போவதாக நினைத்தது சிவசக்தி ஆனந்தனின் அறியாமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.