பஸ் கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்

பஸ் கட்டணத்தை 2 வீதத்தால் குறைக்க அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானம்

by Staff Writer 06-11-2018 | 4:41 PM
Colombo (News 1st) பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் நாளை (07) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பஸ் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டார். எரிபொருளின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, பஸ் கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் விலை குறைவடைந்ததன் பலனை மக்களுக்கு வழங்கத் தயாராகவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எரிபொருளின் விலையைக் குறைப்பதாக லங்கா IOC நிறுவனமும் அறிவித்தது.