கிழக்கில் எந்தவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை

கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை எதிர்க்கத் தயார்: வியாழேந்திரன்

by Bella Dalima 06-11-2018 | 10:41 PM
Colombo (News 1st) தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால் தற்போதுள்ள அரசாங்கத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதாக கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். கிழக்கில் இதுவரை எந்தவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை எனவும் மூன்றரை வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிடமே நிதி அமைச்சு காணப்பட்டபோதும் அக்கட்சி எவ்வித அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை எனவும் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
கிழக்கில் முஸ்லிம் சமூகம் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளது. பிள்ளையான் காலத்தில் துரித அபிவிருத்தி நடந்தது. இப்போது பிள்ளைகளுக்கு மலசலகூடங்கள் கூட இல்லை. 50,000 வீடுகள் கட்டப்படவில்லை. அரசியலிலிருந்து 50,000 பேருக்கு கெட்டது செய்வதை விட ஐவருக்கு நல்லது செய்வது நல்லது
என வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நடுநிலை வகித்தால் தானும் நடுநிலை வகிப்பதாகவும் அவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தால் தாம் மஹிந்த ராஜபக்ஸ தரப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மற்றும் இனப்பிரச்சினை, பெண் வாழ்வாதாரத் திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான திட்டங்கள், மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாகவும் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன அழுத்தத்துடன் செயற்படுவதாகவும் தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால் இந்த அரசாங்கத்தையும் எதிர்க்கத் தயாரெனவும் அவர் மேலும் கூறினார்.