கவிஞர் சார்ளஸின் தற்கொலைக் கடிதம் ஏலத்தில் விற்பனை

பிரான்ஸ் கவிஞர் சார்ளஸின் தற்கொலைக் கடிதம் ஏலத்தில் விற்பனை

by Staff Writer 05-11-2018 | 9:14 AM
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸின் பிரபல கவிஞரான சார்ளஸ் பௌடெலேரின் (Charles Baudelaire) தற்கொலைக் கடிதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1845 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலி ஜீன்னி துவால் (Jeanne Duval) என்பவருக்கு, அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். குறித்த தற்கொலைக் கடிதம் எழுதப்பட்டபோது 24 வயதானவராக இருந்த சார்ளஸ், கடிதம் எழுதப்பட்ட அதேநாளில் தற்கொலைக்கு முயன்றபோதிலும் அதிலிருந்து உயிர்பிழைத்துள்ளார். சார்ளஸ் தனது காதலிக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில், தனது வாழ்க்கையில் எடுத்த முடிவிற்கான நோக்கத்தைக் குறிப்பிட்டிருந்த அதேநேரம், இந்தக் கடிதம் உன்னைச் சேரும்போது நான் இறந்திருப்பேன் என எழுதியிருந்தார். அத்தோடு, நீண்ட நாட்களுக்கு வாழ முடியாமையால் நான் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 3 மடங்கு விலைக்கு குறித்த கடிதத்தை, தனிப்பட்ட ஒருவர் வாங்கியுள்ளதாக பிரான்ஸ் இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சார்ளஸின் தற்கொலைக் கடிதம் 2,67,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.