தமிழ்மொழி மூல பாடசாலைகளிற்கு இன்று விடுமுறை

தமிழ்மொழி மூல பாடசாலைகளிற்கு இன்று விடுமுறை

by Staff Writer 05-11-2018 | 7:14 AM
Colombo (News 1st) வடக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்துத் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்று (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விடுத்துள்ள பணிப்புரைக்கு இணங்க, இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கு மாற்றீடாக வேறொரு சனிக்கிழமையில் பாடசாலை நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் அனுமதிக்கிணங்க, விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், இன்று வழங்கப்படவுள்ள விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்தின் முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணக் கல்விச்செயலாளரின் உத்தரவின் பேரில், இந்த விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எஸ். மனோகர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். இதற்கு மாற்றீடாக எதிர்வரும் 10 ஆம் திகதி பாடசாலை நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.