சிறப்புப் பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஆலயம்

சிறப்புப் பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் ஆலயம்

by Staff Writer 05-11-2018 | 7:45 AM
சபரிமலை கோயில் நடை, சிறப்புப் பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இதனால், நாளை வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என இந்திய உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, சமூக செயற்பாட்டாளர்கள் இருவர் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டமைக்கு பக்தர்களால் எதிர்ப்பு வௌியிடப்பட்டது. இதனிடையே, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐப்பசி பூஜை முடிவடைந்த நிலையில் மூடப்பட்ட நடை, மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்று செல்வதற்கு இதுவரை எந்தப் பெண்ணும் அனுமதி கோரவில்லை என கேரளா பொலிஸா் தெரிவித்துள்ளனர்.