மீனவர்களை உடனடியாக கரைதிரும்புமாறு அறிவித்தல்

மீனவர்களை கரைதிரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

by Staff Writer 05-11-2018 | 7:36 AM
Colombo (News 1st) வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதால், மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை இன்று இரவுக்குள் கரைதிரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், வங்காளவிரிகுடாவின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடற்பரப்பில் அடுத்த சில தினங்களுக்கு குறைந்த காற்றழுத்த நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் நாடு முழுவதிலும் பயணிக்கும் நிலை காணப்படுவதால் இன்று முதல் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்கம் குறிப்பிட்டுள்ளது. வங்காளவிரிகுடாவின் தென்பகுதி கடற்பரப்பில் காற்று மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதும் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.