பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானம்

பஸ் கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானம்

by Staff Writer 03-11-2018 | 7:40 AM
Colombo (News 1st) எரிபொருளின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, பஸ் கட்டணத்தையும் 2 வீதத்தால் குறைப்பதற்கு தனியார் பஸ் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிபொருளின் விலை குறைப்பிற்கமைய பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். இதேவேளை, பஸ் கட்டணத்திருத்தம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்தது. அரசாங்கத்தினால் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டமைக்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலையை குறைத்துள்ளது. இதனடிப்படையில், ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில், ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 118 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 153 ரூபாவாகிறது.