பாராளுமன்றத்தின் 12 குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன

பாராளுமன்றத்தின் 12 குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன

by Staff Writer 02-11-2018 | 4:12 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட​தைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் 12 குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோப் குழு, அமைச்சிற்கான ஆலோசனை செயற்குழு, அரசியலமைப்பு செயற்குழு உள்ளிட்ட 12 குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், உயர் பதவிகளை நியமிக்கும் செயற்குழு, தெரிவுக்குழு ஆகியன தொடர்ந்தும் செயற்படுவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தினம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் (01) கூறியிருந்தார். எனினும், நேற்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் போது எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்ட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.