ஐ.தே.க-வின் பெரும்பான்மையை நிரூபிப்போம்

பாராளுமன்றம் கூட்டப்படும் நாளில் ஐ.தே.க-வின் பெரும்பான்மையை நிரூபிப்பதாக அஜித் பீ. பெரேரா தெரிவிப்பு

by Bella Dalima 01-11-2018 | 7:27 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கூட்டப்படும் நாளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதாக அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றம் கூட்டப்பட்டாலும் அந்நாளில் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்பட மாட்டாது என வதந்தி பரப்பப்படுவதாகவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார். எவரும் நினைத்தவாறு செயற்படுத்தக்கூடியவாறான பாராளுமன்றம் இந்நாட்டில் இல்லை என குறிப்பிட்ட அவர், பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிநிரலைத் தயாரிப்பதற்கான பூரண அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பிரச்சினையை நடைமுறை ரீதியில் தீர்ப்பதற்காக முக்கியத்துவ அடிப்படையில் நிலையியற்கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய, யாருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளது என்பதை சபாநாயகர் தீர்மானிப்பார் என தான் நம்புவதாகவும் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாதவர்கள் இழுத்தடிப்பு செய்து, வலுவற்றவர்களை பணம் கொடுத்து வாங்க முடியுமா என்று முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.