பெரும்பான்மை கிடைக்கும் என ரணில் நம்பிக்கை

பாராளுமன்றத்தில் 113-இற்கும் அதிகமான ஆதரவு தமக்கு கிடைக்கும் என ரணில் நம்பிக்கை

by Bella Dalima 01-11-2018 | 9:19 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று NDTV தொலைக்காட்சிக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார். ரணில் விக்ரமசிங்க: இது எமக்குக் கிடைக்க பாரிய வெற்றி. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி இந்தப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட வேண்டும். அதனை மாத்திரமே என்னால் கூற முடியும். பாராளுமன்ற பெரும்பான்மையை பரிசீலிக்க வேண்டும். அதனைத் தடுக்க முடியாது. 113 பேரின் நிலைப்பாடே தேவைப்படுகிறது. தற்போது எனக்கு 113-ஐ விட அதிகப் பெரும்பான்மை இருக்கிறது. கேள்வி: உங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் அணியில் உள்ளதாக எதிர்த்தரப்பினர் கூறுகின்றனரே ரணில் விக்ரமசிங்க: நாம் கலந்துரையாடலில் இருக்கும் போது அதிகளவிலான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன. 150 மில்லியன் ரூபா தருகின்றோம், எமது தரப்பிற்கு வாருங்கள் என தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. எமது பாராளுமன்ற உறுப்பினர் அதன்போது 250 மில்லியன் கோரி, பின்னர் சிரித்துக்கொண்டு 400 மில்லியனைக் கேட்டுள்ளார். கேள்வி: யார் அவ்வாறு கோரியது? ரணில் விக்ரமசிங்க: ஜனாதிபதி தரப்பின் பல்வேறு குழுக்களே அவ்வாறு கோரியுள்ளனர். எந்த அமைச்சு தேவை என கேட்கின்றனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். பாராளுமன்றத்தைக் கூட்டும் போது பெரும்பான்மையைப் பார்ப்போம். அவ்வாறு செய்தால், யார் அவர்களைக் கோருகின்றார்கள் என்பதனைப் பார்க்க முடியும். அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் இல்லையல்லா? ஜனநாயகத்தின் பின்னால் சர்வதேச சமூகம் உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க இந்த நேர்காணலின் போது குறிப்பிட்டார்.
பாராளுமன்ற பெரும்பான்மையை பரிசீலித்து அதில் நான் தோல்வியடையும் வரையும் அல்லது மீண்டும் தேல்தலுக்கு செல்லும் வரையும் நானே நாட்டின் பிரதமர். அவ்வாறு இடம்பெறவில்லையென்றால், கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பிரச்சினை இல்லை. ஜனநாயகத்தை விமர்சிப்பதா எமக்கு தேவைப்படுகிறது? சில நாடுகள் அதற்கு மேலாக சென்றுள்ளன. அரசியலமைப்பு செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தியா இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நான் நினைக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகள், இவ்வாறான விடயங்கள் ஊடாக பதில் தேடியுள்ளன. பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பெரும்பான்மையின் அடிப்படையில் அதனைத் தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பின்னால் சர்வதேச சமூகம் உள்ளது. சீன தூதுவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. சீனாவின் தூதுவர் இங்கு வந்தார். தகவல்கள் தேவை என அவர் என்னிடம் கூறினார். மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தகவல்களைக் கேட்டறிந்து கொண்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதனை அறிந்துகொள்ளும் தேவை சீனாவிற்கு உள்ளது. இங்கு சீனாவின் அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறையை வழங்கும் பிரேரணை தொடர்பிலும் ரணில் விக்ரசிங்க இந்த நேர்காணலின் போது விளக்கமளித்தார்.
அந்தப் பிரேரணையின் படி நாம் செயற்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும் நாம் வேறு பிரேரணையொன்றைக் கொண்டு வருவோம் என்றும் துறைமுகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எனக்குக் கூறினார். நான் இந்தியாவிற்கு செல்லும் வரை இதில் பிரச்சினை ஏற்படாத வகையில் வைத்திருப்போம் என கூறினேன். அங்கு சென்று இது தொடர்பில் கலந்துரையாடுவோம் என்றேன். இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். பின்னரே இந்திய அரசாங்கம் அவர்களது நிலைப்பாட்டினை அறிவிக்க ஆரம்பித்தது. விரிவான கலந்துரையாடலின் பின்னரே இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும். ஒரு தரப்பினால் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என நான் அங்கு யோசனை முன்வைத்தேன். பின்னர் அமைச்சரவையில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதனை பின்னர் ஆராயலாம். இந்தியாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் என நான் அங்கு குறிப்பிட்டேன்.