1000 ரூபா எனும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: தொழிற்சங்கங்கள் 

by Staff Writer 25-10-2018 | 5:55 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.இராமநாதன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஒரு சில தோட்டங்களில் நாள் சம்பள அடிப்படையில் ​வேலைக்கு அமர்த்தப்படுகின்ற தொழிலாளர்களுக்கு 1200 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுவதாக இதன்போது தொழிற்சங்கள் சுட்டிக்காட்டின. தற்போதைய நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1000 ரூபாவை வழங்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள், கிடைக்கும் பதிலுக்கு அமைவே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளன.