by Staff Writer 23-10-2018 | 10:35 AM
Colombo (News 1st) 70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
எனினும், போதைப்பொருள் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள், மரணதண்டனை மற்றும் ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 70 வயது பூர்த்தியடைந்த கைதிகளே விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த கைதிகள் தொடர்பில் அந்தந்த சிறைச்சாலைகளில் பெற்றுக்கொண்டு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது தெரிவுசெய்யப்படும் கைதிகளின் உறவினர்களிடமும் தகவல்களை பெற்றுக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாறு விடுதலை செய்யப்படும் கைதிகள் மீண்டும் தவறிழைப்பார்களாயின், குறித்த கைதிகளுக்கான தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.