ஹில்டன் ஹோட்டல் கொடுக்கல் வாங்கல்: வாசுதேவ கருத்து

ஹில்டன் ஹோட்டல் கொடுக்கல் வாங்கல் குறித்து வாசுதேவ நாணயக்கார கருத்து

by Staff Writer 23-10-2018 | 11:24 AM
Colombo (News 1st) கொழும்பு ஹயட் ஹோட்டல் கட்டடத் தொகுதியை முதலீட்டாளர் ஒருவரிடம் கையளிக்கும் கொடுக்கல் வாங்கல் சந்தேகத்திற்கிடமானது என தாம் ஏற்கனவே தெரிவித்த கருத்து தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஹயட் மற்றும் ஹில்டன் ஹோட்டல் அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதலீட்டாளர்களின் விருப்பத்தைக் கோரும் பத்திரிகை செய்தி, கடந்த 18ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன், அதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பில் முகாமைத்துவத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு இந்த காலஅவகாசம் போதுமானது அல்லவென வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கொடுக்கல் வாங்கல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுவதையே குறித்த நடைமுறை புலப்படுத்துவதாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பத்திரிகைச் செய்தி தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கையினை நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலீட்டாளர்கள் இந்த ஹோட்டல்களில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் யோசனைகளை முன்வைப்பதற்கு குறைந்தபட்சம் 3 மாத காலஅவகாசத்தை வழங்குமாறும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.