தாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

தாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்

by Chandrasekaram Chandravadani 22-10-2018 | 7:38 AM
தாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 170 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 366 பேருடன் பயணித்த குறித்த ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. Puyuma Express 6432 என்ற குறித்த ரயில், தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ. தொலைவில் சுயாவோ (Su'ao) நகரிலுள்ள ஸின்மா ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்திலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு உதவியாக 120 படை வீரர்களை அனுப்பியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.