டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத்

டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக ரங்கன ஹேரத் அறிவிப்பு

by Staff Writer 22-10-2018 | 1:29 PM
Colombo (News 1st) இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக, ரங்கன ஹேரத் கடிதமொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரங்கன ஹேரத் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கையின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பைப் பெறுவதற்கு ரங்கன ஹேரத்துக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவைப்படுகின்றது. காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கையின் முதலாவது பந்துவீச்சாளர் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனாவார். 2009 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் 10 விக்கெட்களை வீழ்த்தியிருந்தமை நினைவுகூரத்தக்கது. 40 வயதான ரங்கன ஹேரத் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முழுமையான டெஸ்ட் தொடர்களில் இலங்கை அணிக்காக விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பின்னர் இலங்கை அணியின் வெற்றிக்காக உழைத்த வீரராக ரங்கன ஹேரத் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதுவரையில் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரங்கன ஹேரத் 430 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.