விசேட சுற்றிவளைப்பில் 3,560 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பில் 3,560 பேர் கைது

by Staff Writer 21-10-2018 | 6:12 PM

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,124 பேரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில், இன்று அதிகாலை 3 மணி முதல் 7 வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்திய 468 பேரும் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 920 பேரும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 992 பேரும் மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 53 பேரும் கைக்குண்டு மற்றும் இரு துப்பாக்கிகளுடன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 6,020 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 13 சுற்றிவளைப்புக்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12,099 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 36,255 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 64,143 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.