நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய கடும் மழை

by Staff Writer 21-10-2018 | 6:20 PM

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, கலஹா - புப்புரஸ்ஸ பிரதான வீதியின் லெவலன் பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், அந்த வீதியூடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலஹா - புப்புரஸ்ஸ பிரதான வீதியின் லெவலன் பகுதியில் பாரியளவான 2 கற்பாறைகள் நேற்றிரவு சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால், இந்த வீதியூடாக சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிப்பதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். கலஹா - புபுரஸ்ஸவிற்கான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பாரிய கற்பாறை சரிந்து விழும் நிலையிலுள்ளது. இதேவேளை, கடும் மழை காரணமாக மன்னார் - புத்தளம் பிரதான வீதியின் எழுவான்குளம் சப்பாத்து பாலத்திற்கு மேலாக வௌ்ளம் பாய்கிறது. கலா ஓயா பெருக்கெடுத்ததையடுத்து, பாலத்திற்கு மேலாக சுமார் இரண்டு அடிக்கு நீர் நிரம்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, மன்னார் - புத்தம் வீதியுடனான போக்குவரத்து மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.