அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் :UPDATE

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சோதனை நடவடிக்கையை எதிர்த்து கைதிகள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 21-10-2018 | 10:07 AM
Colombo (News 1st) அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் 45 அதிகாரிகள் உள்ளடங்கும் வகையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தொடர்ந்தும் குறித்த கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த கைதிகள் கோபுரமொன்றின் மீதேறி இன்று காலை முதல் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சீசீடிவி கமெரா பொருத்தப்பட்டுள்ள கோபுரத்தின் மீது 50 கைதிகள் வரை ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறினார். கடந்த 17 ஆம் திகதி முதல் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் வௌிப்புற பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை ஈடுபடுத்த சிறைச்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் சிறைச்சாலையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதுடன் வௌிப்பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரியிடம் நாம் வினவினோம். வெலிக்கடை சிறைச்சாலை, புதிய மெகசீன் சிறைச்சாலை மற்றும் வெலிகம சிறைச்சாலைகளிலும் எதிர்காலத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.