by Staff Writer 20-10-2018 | 8:58 AM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில், அந்த விடயத்தில் தலையீடு செய்வதாக தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை எட்டுமாறு இருதரப்பினருக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீர்வு எட்டப்படாவிடின், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் என்ற வகையில், தாம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ரவீந்திர சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இதன்போது, அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும், தொழிற்சங்கங்கள் அந்த யோசனையை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், 1,000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேநேரம், 1,000 ரூபா சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.