by Staff Writer 20-10-2018 | 7:50 AM
Colombo (News 1st) மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், வட மத்திய, வட மேல் ஆகிய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
அதேநேரம், மண்சரிவு ஏற்பட்ட ஹட்டன் - நியூவெலி பகுதிக்கான புதிய வீதியின் நிர்மாணப்பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
30 அடி அகலத்திற்கு இந்த வீதி அமைக்கப்படவுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீதிக்கான மானியங்களை ஒதுக்கியுள்ளது.
இந்த வீதி ஹட்டன் - பொகவந்தலாவை பழைய வீதியுடன் இணைக்கப்படவுள்ளது.
இதேவேளை, நியூவெலி பகுதியில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கும் நோர்வூட் - கிளங்கன் பகுதியில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார்.
குறித்த காணியில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும் நிதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.