மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை இராஜினாமா செய்யத் தயார்: ஹேமசிறி பெர்னாண்டோ
by Staff Writer 19-10-2018 | 8:53 PM
Colombo (News 1st) ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய தான் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பரிந்துரையை துறைசார் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதுவரை தமக்கு பெற்றுக்கொடுக்காமையே இராஜினாமா செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் எனவும் மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்
இதேவேளை, முதலீட்டு சபை, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகள் குறித்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, கடந்த 17 ஆம் திகதி முதலீட்டு சபை, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டன.
தாம் இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் துமிந்த ரத்நாயக்க நியூஸ்ஃபெஸ்டிற்குக் கூறினார்.
எனினும், பணிப்பாளர் சபைகளை மீளமைக்கும் வரை எவ்வித இடையூறுகளும் இன்றி குறித்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அரச வங்கிகளின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளை விரைவில் மீளமைப்பதற்கு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாகக் கூறப்படுகின்றது.
குறித்த அமைச்சின் பிரதான கணக்கியல் அதிகாரி, அமைச்சின் செயலாளருக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அரசியலமைப்பின் 41 ஆவது யாப்பிற்கு அமைய, செயலாளரை நியமித்தல் மற்றும் நீக்கும் அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே உள்ளது.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் உத்தரவை செயற்படுத்தும் அதிகாரம் செயலாளருக்கு எவ்வாறு இல்லாமற்போகும்?
திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய நீக்கப்பட்டிருந்த போது, அரசியலமைப்பு ரீதியாகவுள்ள இந்த அதிகாரத்தின் கீழ் அவர் மீள அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.