தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி

பாடசாலை மாணவிகளுக்கு கராத்தே: தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி

by Bella Dalima 19-10-2018 | 5:24 PM
பாடசாலை மாணவிகளுக்கு கராத்தே கற்றுக்கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு எழுமின் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர். இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தியிருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி.
இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தமிழக அரசு சார்பில் பாடசாலை மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் 'எழுமின்' படக்குழுவினர் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.
என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் எழுமின் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி.