குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றும் ஆஜரானார் நாலக்க டி சில்வா
by Staff Writer 19-10-2018 | 3:43 PM
Colombo (News 1st) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார்.
இன்று காலை 9.30 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்றைய தினம் (18) சுமார் 9 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார அம்பலப்படுத்தியதை அடுத்தே பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.
கடந்த 16 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டாலும் தனிப்பட்ட காரணத்தினால் அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை.
இரண்டாவது தடவையாகவும் கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே நேற்றைய தினம் நாலக்க டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.