நிசாம்தீனுக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டது

இலங்கை மாணவர் மொஹமட் நிசாம்தீனுக்கு எதிரான வழக்கை அவுஸ்திரேலியா பொலிஸார் மீளப்பெற்றனர்

by Staff Writer 19-10-2018 | 3:34 PM
Colombo (News 1st) பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் மொஹமட் காமர் நிசாம்தீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அந்நாட்டு பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இன்மையால் வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மொஹமட் நிசாம்தீன், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அந்நாட்டின் அரசியல் தலைவர்களான மெல்கம் டேர்ன்புல், ஜூலி பிஷப் ஆகியோரை கொலை செய்வதற்கான திட்டம் அடங்கிய ஆவணம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சிட்னி நகரின் பல இடங்களிலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களும் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் காணப்பட்டதாக அந்நாட்டு பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் முன்னாள் சபாநாயகர் ப்ரொன்வின் பி​ஷப், சிட்னி ஒபேரா இல்லம் உள்ளிட்ட சில பொலிஸ் நிலையங்களும் அடங்குகின்றன. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட இலங்கை மாணவரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்களில் காணப்படும் கையெழுத்து அவருடையது அல்ல என நிபுணர்கள் பின்னர் தெரிவித்தனர். இந்நிலையில், கட்சிக்காரருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக மாணவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கிற்கு செலவிடப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாக மொஹமட் நிசாம்தீனின் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.