by Staff Writer 18-10-2018 | 10:47 AM
Colombo (News 1st) பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த "ஹைபிரிட் சுத்தா" என்றழைக்கப்படும் சமீர ரசங்க என்பவர், 13 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் பாதுக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 1.1 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 7,50,000 ரூபா பணமும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அங்கொட ஹிம்புடான பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேகநபர், நெட்டிஒலுவ பகுதியில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது கொழும்பு தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகில் ஹைபிரிட் காரில் சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது, குறித்த காரை செலுத்திய நபர் இவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.