ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி: 'தி ஹிந்து' வௌியிட்ட செய்தியின் பின்புலம் என்ன?
by Bella Dalima 18-10-2018 | 9:34 PM
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களில் இந்தியாவின் RAW உளவாளி ஒருவரும் இருக்கலாம் என அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக நேற்றைய (17) ''தி ஹிந்து'' பத்திரிகையில் செய்தி வௌியாகியிருந்தது.
இதனையடுத்து, ஜனாதிபதி செயலகமும் ஊடகப்பிரிவும் இந்த செய்தி பொய்யான தகவலை அடிப்படையாக வைத்து வௌியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தன.
இதன் பின்புலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.
இதனையடுத்து, இந்த செய்தி குரோத மனப்பாங்கோடு வௌியிடப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டது.
இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து எவ்விதக் கருத்தும் வௌியிடப்படவில்லை.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட 15 பேருடன் இன்று மாலை இந்தியா புறப்பட்டுச் சென்றார்.
இந்த விஜயத்தின் போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படும் விடயம் வௌிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் வௌியாகியுள்ள இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுவரை மௌனம் காப்பது ஏன்?
ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.